Tuesday, November 18, 2008

இறங்கி வா இயேசுவே சிலுவையிலிருந்து சீக்கிரம் !!!

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" #1.

இயேசு கிறிஸ்துஇயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளைகளில் முக்கியமானதாக கருதப்படும் கட்டளை இது. தன்னைத்தானே கிறிஸ்தவம் என்னும் மதத்தில் இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும், தன் வாழ் நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த கட்டளையை குறித்து சிறிதளவேனும் கண்டிப்பாக சிந்தித்திருப்பான். இனி இந்த கட்டளை கொடுக்கப்பட்ட கால கட்டத்தையும், யாருக்காக கொடுக்கப்பட்டது என்பதையும் சற்றே பார்ப்போம்.இந்தக் கட்டளை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்த்துவின் சீஷனாகும் தகுதி பெற்றவர்களுக்கு மாத்திரமே இந்த கட்டளை கொடுக்கப்பட்டது. தகுதிகள் என்னென்ன :

அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி " ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக் கடவன்" # 2


சீஷனாக இருக்கவிரும்புகிறவன் தனக்குண்டான யாவற்றையும் விட்டு, சுயநலம் துறந்து, பிறர் நலம் விழையும் ஒருவனாக மாறினால் மாத்திரமே அவன் இயேசுவின் சீஷனாக முடியும். அப்படிப்பட்ட சீஷன் மாத்திரமே மற்ற மனிதனுக்கு நல்வழி காட்ட முடியும்.


இனி சீஷர்கள் உருவான விதத்தைப் பார்ப்போம். கிறிஸ்து மண்ணில் வாழ்ந்த நாட்களிலும் சரி, அவரது நாட்களுக்குப் பிறகும் சரி, அவரால் போதிக்கப்பட்ட இறையியல் தத்துவம் என்பது வெகுவாக மக்களால் வரவேற்கப்பட்டது. வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமெனில் கிறிஸ்த்துவின் போதனைகளை ஏற்க மறுத்த யூத குலமே, பின்னாட்களில் அவரது போதனைகளில் பொதிந்து கிடக்கும் இறையியல் உண்மைகளையும், அன்பின் ஆழத்தையும் கண்டு வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். வெறும் எபிரேய மண்ணில் (இன்றைய மத்திய கிழக்கு நாடுகள்) மாத்திரமே வெகுவாக பிரசங்கிக்கப்பட்டு வந்த இந்த தத்துவம், ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்தவுடன் புது பரிமாணத்தைக் கண்டது. கான்ஸ்டன்டைன் என்னும் மன்னன் மாத்திரம் இந்த எளிய வாழ்வியல் நெறியால் கவரப்பட்டு, தன்னை மாற்றிக்கொள்ளாமலிருந்திருப்பானெனில், இந்த தத்துவங்கள் வெறும் தத்துவங்களாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு மன்னன் தன் இறையியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட பிறகு அதை மக்களிடத்தில் சொல்லாமலிருந்தால் அவன் மக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி விடுவான். இன்றைய நாட்களைப் போல் மதச் சாற்பற்ற நிலையிலெல்லாம் மன்னன் அந்த நாட்களில் இருந்து விட முடியாது. மன்னன் ஒரு முன் மாதிரியாய் வாழ வேண்டிய கட்டாயம் அந்த நாட்களில் இருந்தது. ஆகவே மன்னன் இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக அறிவிக்கப் போக, இந்த கிறிஸ்துவின் போதனை என்னும் ஒரு வாழ்வியல் தத்துவம், மதமாக பரிமாணமெடுத்து வேறு திசையில் பிரயாணிக்க ஆரம்பித்து விட்டது. மன்னன் அறிவிக்கும் வரை வாழ்வை நல்வழிப்படுத்தும் நெறிகள் நிறைந்த இப்போதனைகள், அரசனின் அறிவிப்புக்குப் பின் மதச்சாயம் பூசிக்கொண்டு மதம் பிடித்து அலைய ஆரம்பித்தது. இந்த வாழ்வியல் தத்துவங்கள் என்று மதம் எனும் மார்க்கத்தில் பயணம் செய்ய ஆரம்பித்ததோ அன்றே அதனுடன் பூசல் கொண்ட சடங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு சேர ஆரம்பித்தன. பாவ மன்னிப்பென்ற சடங்கு, பின்னர் ஞானஸ்நானம், புது நன்மை போன்ற சடங்குகள் நிறைந்து இது கத்தோலிக்க மதமாய் வலுவாய் கால்களை ஊன்ற அதிக நாட்கள் பிடிக்கவில்லை. அரசியல் ஆதரவும் கூட இருந்ததால், இந்த மத நம்பிக்கை மற்றவர்களின் இறைஉணர்வை வலுக்கட்டாயமாக ஆட்கொள்வதென்பது வெகு சுலபமாய் போய் விட்டது. மனிதனுக்குள் எப்பொழுதும் தானாகவே ஊற்றெடுத்துக்கிடக்கும் இறைத்தேடலுக்கு விடை தருவது போன்ற வெளித்தோற்றத்தை , காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்ட இந்த மத நம்பிக்கைகள் வெகுவாய் தர ஆரம்பித்தன.இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த இந்த கிறிஸ்த்தவ மதம், இந்தியாவிற்குள்ளும் வந்து சேர்ந்தது.


இது இந்தியாவிற்குள் வந்த கால கட்டத்தைக் குறித்த தெளிவான அறிவு எனக்கு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான "தோமா" முதலாம் நூற்றாண்டிலேயே வந்து கிறிஸ்துவின் போதனைகளை அறிவித்தார் என்றும், கேரள பிராமிணர்களின் முன் அற்புதங்கள் செய்து காட்டினார் என்றும், சென்னை பரங்கி மலையில் இருந்தார் என்றும் ஒரு சாரார் வரலாறு எழுத, இவை அனைத்தும் பொய் எனவும், தோமா பரங்கி மலைக்கு வரவேயில்லை, இவை அனைத்தும் கட்டுக்கதை என ஒரு சாரார் அதை மறுத்தும் எழுதிக்கொண்டு வருகிறார்கள். இதன் உண்மை நிலையை குறித்த ஆராய்ச்சி நமக்கு அவசியமில்லை. ஆனால் 18ம் நூற்றாண்டில் தமிழக கடற்கரையோர கிராமங்களில் அவ்வப்பொழுது, போர்ச்சுக்கீசிய வணிக கப்பல்கள் வந்து போவதும், அதில் பயணித்த பயணிகள் மூலமாகவும் இந்த கிறிஸ்த்தவ மதம் என்பது பரப்பப் பட்டது என்பதற்கு கடற்கரையோர இன்றைய கிறிஸ்த்தவ கிராமங்களே சாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் வெகு சீக்கிரமாக பரவிய வாழ்வியல் மாற்றம் பல மனிதர்களின் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதுமாக ஒரு கலந்த விழைவுகளை ஏற்படுத்தியது. பல மன்னராட்ச்சிகள் கவிழ்ந்தன, அரசுகள் தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டன, ஒரு புறம் முதலாளித்துவம் என்பது மேலோங்க ஆரம்பித்தாலும், அதற்கு எதிர்வினைகளாக புரட்சிகளும் வெடித்தன. நிம்மதி என்பது அரிதாகக் கிடைக்கும் ஒரு உணர்வாய் மாறிவிட்டதால் மக்களிடம் இறை நம்பிக்கை வளர ஆரம்பித்தவுடன், அந்த நம்பிக்கையை சரியாய் திசை திருப்பி தனக்கு ஆதாயம் தேடிக்கொள்வதில் "மதம்" ஒரு பெரிய வெற்றியை அடைந்தது. அதன் மூலம் மதப் பிரச்சாரம் என்பது மதத்தின் ஒரு நீங்கா அங்கமாகி இருந்ததது. அப்படி பிரச்சாரம் செய்ய வந்தவர் தான் "பர்த்தலமெயு சீகன்பால்க்" எனும் டென்மார்க் தேசத்துக்காரர்.

1709 - ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 -ம் தேதி இவர் வந்து தமிழகத்தின் தரங்கம்பாடியில் கரை இறங்கினார். வரலாற்றுப் பக்கங்களில் காணக் கிடைக்கும் முதல் கிறிஸ்த்தவ மதப்பிரச்சாரகர் இவர் தான். ஆனால் இவர் வந்த காலத்தில், இந்தியாவில் இருந்த இறை நம்பிக்கைகள் இவருக்கு ஒரு சவாலாக இருந்த பொழுதிலும், வருணாசிரம கொள்கை, மனுதர்ம கொள்கை இன்னும் என்னென்ன கண்ராவிக் கொள்கைகளோ, இந்தக் கொள்கைகளினால், சமுதாயத்தில் நச்சுப்போல் பரவியிருந்த சாதிக்கொடுமை, இவரது மதப்பிரச்சாரப் பணியை சுலபமாக்கியது. மனிதனுக்கு அன்றும் சரி, இன்றும் சரி, சமூக அந்தஸ்த்து என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாய் இருக்கிறது. அந்த அந்தஸ்து எதன் மூலமாய் கிடைக்கிறதோ, அதை சார்ந்தே அவன் வாழ்கிறான். தமிழகத்தில் மனிதனுக்கு அந்த நாட்களில் ( ஏன் இந்த நாட்களிலும் கூடத்தான்) காணப்பட்ட சாதிக்கொடுமைகளில் இருந்து விடுபட்டு தலை நிமிர்ந்து நிற்க இந்த புதிய மதங்களின் வரவு மிகவும் வசதியாய் போய் விட்டது. ஆனால் இந்த மதப்பிரச்சாரகர்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இந்த இந்திய பூமியில் காத்திருந்தது. அதாவது, சமூகத்தில் நிலவி வந்த (வருகின்ற)சாதிக்கொடுமையினால் மனிதனுக்குள் ஏற்றத் தாழ்வுகள் அவனது பிறப்பிலேயே புகுத்தப்படுவது மாத்திரமல்ல, அவனது அடிப்படை உரிமைகள் கூட சாதியின் பெயரால் மறுக்கப்படுவது இன்றும் ஒரு அருவருப்பான நிகழ்வும், உண்மையும் தான். இந்த கசப்பான உண்மையை கண்டு ஆச்சர்யமும் வேதனையும் அடைந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் அடிப்படை உரிமைக்கான உத்திரவாதத்தை முதலில் தோற்றுவித்தனர். பாடசாலைகள் தோற்றுவிக்கப்பட்டன, மருத்துவ மனைகள் கட்டப்பட்டன. இவற்றுக்கெல்லாம் இறைவனின் பெயரால் வாரி வழங்க ஐரோப்பியர்கள் தயாராய் இருந்தனர். அப்படி நிறுவப்பட்ட அநேக ஸ்தாபனங்கள் தான் இன்று வாரி வழங்கும் அட்சய பாத்திரங்களாய் சிலருக்கு உபயோகப்படுகின்றன. இப்படி நல்ல நோக்கத்துடன் துவக்கப்பட்ட சபைகளும், ஸ்தாபனங்களும் ஆரம்ப நாட்களில் என்னவோ ஒழுங்காய் செயல் பட்டது போல் தோன்றினாலும், பின்னாட்களில் சாதிக்கொடுமை என்னும் சமூக அவலம் சபைகளையும் விட்டு வைக்கவில்லை. #3

இப்படிப்பட்ட சபைகளில் இருந்து தோன்றிய ஊழியக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அட்டூழியக்காரர்கள் மதத்தின் பெயரால் இன்றைய நாட்களில் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதைப்பற்றித்தான் இந்த முழுப்பதிவும். இந்தியாவில் கிறிஸ்தவ மத தோற்றத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த சேவை உணர்வு அடியோடு ஒழிந்து போய், முதலீடில்லாமல் லாபம் ஈட்டும் ஒரு தொழிலாய் கிறிஸ்துவின் போதனைகள் திரிந்து இழிந்து நிற்கிறதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இந்தியர்களுக்குள் இருந்த இறைத்தேடல் வழிமுறைகளும், பரம்பொருளை குறித்த ஞானமும் உலகின் தலைசிறந்த கொள்கைகளாயும், ஞானமும் இருந்தவை. உருவில்லா ஜோதியை வழிபடும் வழிபாட்டு முறைகளை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். ஆனால் இந்த வழிபாட்டு முறைகள் வெறும் சடங்கு சார்ந்தவைகள் மாத்திரமல்ல, உணர்வு சார்ந்தவைகளும் கூட. இந்தியர்களின் வாழ்வியல் நெறிகள், புழு பூச்சிக்கு கூட சிறிதும் தொல்லை தராதவைகள். முழுதும் சுய ஒழுக்கத்தை வலியுறுத்தும் போதனைகள் நிறைந்தவை. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் சுய ஒழுக்கம் வலுவாய் வலியுறுத்தி கூறப்பட்டாலும், பிறர் நலன் பேணுதல் என்பது முன்னிறுத்தப்பட்டது. இந்த பிறர் நலம் பேணும் பண்பு இந்தியாவில் கிறிஸ்தவ பிரச்சாரங்களில் எதிரொலித்தது மாத்திரமல்ல, செயல் வடிவத்திலும் வெகுவாய் காணப்பட்டது. அதன் விழைவுகள் தான் இந்த கல்விக் கூடங்களும், மருத்துவ சேவைகளும் மற்றும் பல சேவைகளுமாய் இருந்தது. ஆனால் வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரிய நிகழ்கால உண்மை என்பது இந்த பிறர் நலம் பேணல் முற்றிலுமாய் சுய நலம் பேணலாய் மாறி விட்டது. கல்விக்கூடங்கள் பணம் காய்க்கும் மரங்களாக மாற்றப்பட்டன. சபைகள் பணம் சேர்க்கும் கேந்திரங்களாக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவுக்கு நிறைய வேலைகள் கட்டளையிடப்பட்டன, இயேசு அழைக்கிறாரில் ஆரம்பித்தது, இப்பொழுது, விடுவிக்கிறார், குணமாக்குகிறார், சுகமாக்குகிறார், மனம்மாற்றுகிறார், துயர் துடைக்கிறார், அன்பு செலுத்துகிறார், பார்க்கிறார், கேட்கிறார், மன்னிக்கிறார், தூக்கி விடுகிறார் என்று இன்னும் இயேசு கிறிஸ்த்துவை என்னென்னமெல்லாமோ செய்யவைத்தார்கள், வைக்கிறார்கள். சென்ற முறை நான் பிறந்த மண்ணான கொங்கு நாட்டிற்கு சென்ற பொழுது ஒரு விளம்பர பலகை பார்த்தேன். "இயேசுவின் கண்ணீர் ஊழியங்கள்". அடப்படுபாவிகளா!! இயேசுகிறிஸ்து எப்பொழுதிருந்து அழுக ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. மக்களும் ஆட்டு மந்தைகளாய் சென்று இப்படியெல்லாம் செய்யும் இயேசுவை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி கவர்ச்சிகரமான ஊழியங்களினால் சமூகத்தில் மூன்று வகையான விழைவுகளை காண முடிகிறது.


ஒன்று : கிறிஸ்துவின் சீஷத்துவ குணம் சிறிதும் இல்லாத இந்த ஊழியக்காரர்களால் கிறிஸ்துவின் போதனைகள் முற்றிலும் மாற்றப்பட்டு கவர்ச்சிகரமான கருத்துகள் புகுத்தப்பட்டதால், உண்மைப் போதனைகளின் தொன்ம வடிவம் அடியோடு அழிக்கப்பட்டு விட்டது. மக்களின் தேவைக்கேற்ப சுவிஷேஷம் வழங்க இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள்.இதன்மூலம் கிறிஸ்தவ போதனைகள் புறம் தள்ளப்பட்டு, கிறிஸ்துவின் பெயரால், எந்த இறை நம்பிக்கைக்கும் ஒவ்வாத அருவருக்கத்தக்க போதனைகளால் மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.


இரண்டு : எங்கு திரளான மக்கள் கூடுகிறார்களோ, அங்கு பணப்புழக்கம் அதிகரிக்கப்படுகிறது. கணக்கில் சேராத பணம் திரண்டு வருவதால், பிரச்சனைகள் அதிகமாகிறது. இந்த புகைப்படத்தைப் பாருங்கள்.
இவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள். பணப்பிரச்சினையில் சிக்கியிருக்கும் இவர்களால் எப்படி மற்றவர்களுக்கு "பண ஆசையை ஒழித்து விடுங்கள்" என்று போதிக்க முடியும். இவர்கள் என்ன தெருவில் அமர்ந்து யாகம் செய்யவா அமர்ந்திருக்கிறார்கள்????? வெட்ககேடாய் இருக்கிறது. இவர்களா இறைஞானம் போதிக்கப்போகிறார்கள்? இவர்களைப் பார்த்துத்தான் இயேசு கிறிஸ்து சொன்னாரோ " குருடன் குருடனுக்கு எப்படி வழி காட்ட முடியும்?"


மூன்று : இந்த துர்போதனைகளினால் நடைபெறும் மூளைச்சலவையில் ஒரு கூட்ட மக்கள், தங்களை அறியாமலே இதில் இழுக்கப்பட்டு, பின் இந்த சக்கர வியூகத்தில் இருந்து வெளி வர வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் பரிதாப நிலையை காண முடிகிறது. கிறிஸ்தவர்கள் என்னும் முத்திரை இந்த கூட்டத்தாரின் மேல் குத்தப்படுவதால், நேற்றுவரை கலாச்சார செருக்குடன் வாழ்ந்துவந்த தங்களின் சமுதாயத்திலேயே இவர்கள் அந்நியமாகிப்போய் நிற்கிறார்கள். இப்படி அடையாளம் தொலைத்து செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த மந்தையைத் தான் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சுற்றிக் கொண்டிருக்கும் வன்முறை கும்பல்கள், மதம் மாற்றுகிறார்கள் என்ற பெயரில் சூறையாடுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே மூளைச்சலவை செய்யும் கும்பல் எந்தப்பாதிப்பும் இல்லாமல் தங்கள் பணியை செவ்வனே செய்து வருகிறது. இதையெல்லாம் காணும் போது இறைவனிடத்தில் இப்படியாய் மன்றாடத் தோன்றுகிறது.

இயேசுவே இறங்கி வா சிலுவையிலிருந்து சீக்கிரம்!!
இந்த கெட்ட குமாரர்களை கட்டி அணைத்துக் கொள்ள அல்ல
வெட்டி அழித்துக் கொல்ல வா!!
இவர்கள் உனக்கு சிலுவையில் கோவணம் கட்டிவிட்டு
தன்னுடலுக்கு பட்டாடை உடுத்துகிறார்கள்.
ஆணிகள் பாய்ந்த உன் கரத்தை காட்டி இவர்கள் உலகின்
ஆஸ்த்திகள் அனைத்தும் வாரிக்கொள்கிறார்கள்.
முள்முடி சூடிய உன் முகத்தைக் காட்டித்தான் இவர்கள் தன்
தலையை மூடும் கிரீடங்கள் சூடுகிறார்கள்.
உன்னைப் போல் பிறனை நேசி என்றாய், ஆனால் இவர்கள்
தன்னையும் உலகையும் மட்டுமே நேசிக்கிறார்கள்.
இறங்கி வா இயேசுவே சிலுவையிலிருந்து சீக்கிரம்!!!
இந்த கெட்டகுமாரர்களை கட்டி அணைத்துக் கொள்ள அல்ல
வெட்டி அழித்துக் கொல்ல வா!!
ஆதாரங்கள்:
#1 - இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள "பரிசுத்த வேதாமம்"மத்தேயு எழுதிய நற்செய்தி நூல், அதிகாரம் 28, 19 மற்றும் 20 ம் வசனங்கள்.
#2 - இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள "பரிசுத்த வேதாமம்"மத்தேயு எழுதிய நற்செய்தி நூல், அதிகாரம் 16 , 24 ம் வசனம்.

Sunday, November 16, 2008

நீதி வாழ்வது இந்தோனேஷியாவில் மட்டும் தானா?

2002 ம் ஆண்டு இந்தோனஷியாவின் புகழ் பெற்ற உல்லாச புரியான பாலி தீவில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதியில் நடை பெற்ற குண்டு வெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 160 பேர் வெளி நாட்டவர்கள். விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக அழகு கொஞ்சும் பாலித்தீவிற்கு வந்தவர்கள். அதிக பட்சமாக ஆஸ்த்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். சில அமெரிக்கர்களும் கொல்லப்பட்டார்கள். இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் புலன் விசரணையில் இந்தோனேஷிய அரசு வெற்றி கண்டு மூன்று குற்றவாளிகளை நீதி மன்றத்தின் முன் நிறுத்தியது.

படத்தில் காணும் "இமாம் சமுத்திரா, அம்ரோஸி, மற்றும் முக்லாஸ்" என்கிற மூவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மரண தணடனை நவம்பர் 9 - 2008 ல் இந்தோனேஷியாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசுக்கு நான் கேட்க விரும்பும் சில கேள்விகள்:

1. மண்புமிகு மந்திரியோரே, இந்தோனஷியாவில் என்ன நடந்தது, எதற்காக இந்த மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

2. ஒரு இஸ்லாமியருக்கு அவரது சொந்த மண்ணிலேயே தீவிரவாதத்திற்கு துணைபோனதற்காக பாரபட்சமில்லாமல் அதிகபட்ச தண்டனை வழங்கியதன் மூலம் நீதி இன்னும் இந்தோனேஷியாவில் வாழ்கிறது என்பதை அந்நாட்டு அரசும், நீதித்துறையும் உலகுக்கு உணர்த்தி உள்ளதை கண்டீர்களா?

3. உலகத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, எங்கள் மண்ணில் தீவிர வாதத்திற்கு ஊசிமுனையளவு கூட இடம் தர மாட்டோம் என உலகுக்கு எடுத்துச்சொல்லியுள்ளதை கண்டீர்களா?

4. தீவிரவாதத்திற்கு துணைபோனார் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய அரசு கூட ஒரு இஸ்லாமியரை விட்டு வைக்கவில்லை பார்த்தீர்களா?

5. அப்படியிருக்க இந்திய பாரளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியை நீதியின் முன் நிறுத்திய பொழுது, நீதி மன்றம் தீர விசாரித்து அவனுக்கு மரண தண்டனை அளித்த பின்பும் அதை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்திருக்கிறீர்களே அதன் காரணம் என்ன?

6. இதே குற்றவாளி ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் வேற்று மதத்தை சார்ந்தவராக இருந்திருந்தாலும் கூட உங்களுக்கு இதே மாதிரி மனித நேயமும் கருணையும் பீரிட்டுக் கிளம்பி இருக்குமா?

7. கேவலம் இவ்வளவு தரம் தாழ்ந்த உங்களை காப்பதற்கென்று தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடி, உயிர் விட்டார்களே அந்த கடமை தவறா பாதுகாவலர்கள், அவர்களது உயிர் தியாகத்திற்கு மதிப்பு கொடுக்கும் வண்ணமாகவாவது இந்த நீதிமன்றத்தீர்ப்பை ஒரு முறை உங்கள் ஓட்டு வங்கி அரசியலை விட்டு வெளியே வந்து வாசித்துப் பாருங்கள்.

8. இல்லையேல் இரண்டு தவறான முன்மாதிரியை நீங்கள் முன் வைக்கிறீர்கள்.

ஒன்று : ஒரு தீவிரவாதிக்கு இஸ்லாமிய நாட்டிலேயே அவன் இஸ்லாமியன் என்றும் பாராமல் தண்டனை அளித்ததன் மூலம். இந்தோனேஷியா தன்னை ஒரு தீவிரவாத எதிர்ப்பு நாடு என நிரூபித்து விட்டது. ஆனால் தீவிரவாதி ஒரு இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்துக்காக அவனது தண்டனையை ரத்து செய்ததின் மூலம், முதலாவது நீங்கள் கொண்டிருக்கும் மதச்சார்பின்மைக் கொள்கை மிகவும் போலியான்து என்று நிரூபிப்பதோடு நின்று விடவில்லை நீங்கள், ஒரு இஸ்லாமியன் என்னும் போர்வையில் எந்த வகையான தீவிரவாத செயலையும் இந்திய மண்ணில் சர்வ சாதாரணமாக செய்துவிட்டு தப்பிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி விட்டீர்கள்.

இரண்டு : நீங்கள் பால்வார்த்து வளர்க்கிறீர்களே, இந்த போலி மதச்சார்பின்மை என்ற போர்வையில் ஒரு தீவிரவாத நாகத்தை, அந்த விஷப்பாம்பு உங்களைக் கொத்த அடுத்த முறையும் கண்டிப்பாக வரும். ஆனால் அப்பொழுது உங்களைக் காக்க ஒரு அடி எடுத்து வைக்க கூட எந்த பாதுகாவலனும் ஆயிரம் முறை யோசிப்பான். அப்படி யோசித்து முடிவெடுத்து, அடியெடுத்து வைப்பதற்குள், உங்களை அந்த நாகம் முழுதுமாய் விழுங்கியிருக்கும்.

கருப்பு மண்ணில் கலந்த நிறங்கள் - பாகம் - 2

உலக உருண்டையை உருட்டி விட்டு ஆப்பிரிகா கண்டத்தை உற்றுப் பாருங்கள் என்று சொன்னேன், அதற்காக இப்படியா முறைத்துப் பார்ப்பது, கண்ணை எடுங்கள். அந்த அழகிய கண்டத்தின் மீது உங்கள் கண்ணே பட்டு விடும் போல் உள்ளது. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த கண்டத்தின் அழகில் மயங்கி நிற்பதற்கு முன் சற்றே சுற்றியுள்ள பகுதிகளையும் சுற்றிப்பாருங்கள்.

வடக்கே மத்திய தரைக் கடல் என்று ஒரு கடலை பார்த்திருப்பீர்கள். இந்தக் கடல் எதோ ஒரு சாதாரண கடல் என்று நினைத்து விடாதீர்கள். பார்ப்பதற்கு ஒரு சாதுவான பிள்ளையை போல் தெரிந்தாலும் அநேக சரித்திர நிகழ்வுகளுக்கு தன் ஆர்ப்பரிக்கும் அலைகளால் சாட்சி சொல்லும் ஒரு நீர்க்குவியல். அநேக நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் இதன் பெயர் தவறாமல் தவழ்ந்து வரும்.


கிறிஸ்தவர்களின் வேத நூலான "பரிசுத்த வேதாகமத்தில்" சொல்லப்படும் "நோவாவின் பேழை" க்குப்பிறகு மனிதன் சகல சௌகர்யங்களுடன் நீர்மேல் பயணிக்க பயணியர் கப்பல் என்ற ஒன்று புறப்பட்டிருக்குமானால் அது இந்தக் கடலின் மீது தான் வெள்ளோட்டம் விடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடலின் மேற்கு முனையில் ஜிப்ரால்டர் ஜலசந்தி என்று ஒரு ஜலசந்தியை பார்த்திருபீர்கள்.

அநேக ஐரோப்பிய நாடுகளின் தெற்குக் கரைப் பகுதியை அடைய இந்த ஜலசந்தியை கடந்துதான் எந்தவொரு கப்பலும் செல்லவேண்டும். அப்படியே சற்று கிழக்கே வாருங்கள். அழகான சைப்ரஸ் தீவுகள் கண்களில் பட்டிருக்குமே, அந்த பசுமை மாறா நினைவுகளோடு அப்படியே தென் கிழக்கு கரையோரம் பாருங்கள்.

ஆப்பிரிக்காவின் பழமை வாய்ந்ததும், சிற்பக் கலை, கட்டிடக் கலை என எல்லாக்கலைகளுக்கும் பெயர் பெற்றதும்,செல்வச் செழிப்பும் மிகுந்த எகிப்து என்னும் நாட்டின் வடகிழக்கு மூலையில் மூக்கு போன்ற ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருக்குமே அதுதான் சீனாய் வனப்பகுதி. இந்த சீனாய் வனப்பகுதியையும் எகிப்து நாட்டையும் பிரித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கால்வாய் ஓடுகிறதே பார்த்தீர்களா அதற்குப் பெயர் தான் "சூயஸ் கால்வாய்".

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் மாற்றங்களில் பெரும் பங்கு வகித்தது இந்த கால்வாய் தான். தென் ஆப்பிரிக்க கதையை சொல்கிறேன் என்று புறப்பட்டு, இது என்ன ஆப்பிரிக்கா கண்டத்தை இந்த பொன்னையன் சுற்றுகிறானே என்று நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. சற்றே முகத்தை நேராக்கி விட்டு நான் சொல்வதை கேளுங்கள். இந்த சூயஸ் கால்வாய்க்கும் ஆப்பிரிக்கா கண்டத்தின் தலைவிதி திருத்தி எழுதப் பட்டதற்கும் நேரடி தொடர்பு உள்ளது.

சரி, இந்த கால்வாயின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா? மத்திய தரைகடலிலுள்ள போர்ட் சயீத் என்னும் துறைமுகத்தையும், செங்கடலில் உள்ள சூயஸ் துறைமுகத்தையும் இணைக்கும் ஒரு நீர்வழிப்பாதைதான் இந்த கால்வாய். ஒரு புறம் இருந்து மறுபுறம் வரை 163 கிலோமீட்டர் நீளத்திலும் 300 மீட்டர் அகலத்திலும் ஓடுவது என்னவோ வெரும் நீர் தான் என்றாலும், அது இணைப்பது எதை என பாருங்கள்.

எப்பொழுதும் எந்த வீட்டில் புகுந்து, எதை பிடுங்கிப் போகலாம் என வேவு பார்த்துத் திரியும் ஐரோப்பிய ஓநாய்களின் கடல் பகுதிகளையும், வியர்வை சிந்தி விதை விதைத்து, நாற்று நட்டு, களை எடுத்து, விளைந்து சிரிக்கும் பயிர்களோடு தினமும் பல கதைகள் பேசி, ஆதவன் மறைந்ததும் அயர்ந்து உறங்கச் சென்ற அப்பாவி மக்களின் நாடுகளையும் இணைக்கிறது.

கிழக்கு நாடுகளுக்கு ஒரு நீர்வழி காணவேண்டும் அதுவும் அகன்று விரிந்துள்ள ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றாமல் குறுக்கு வழியில் செல்ல ஒரு நீர்வழிப் பாதை இருந்தால் நன்றாயிருக்குமே என இந்த ஐரோப்பிய ஓநாய்கள் வெகு காலமாக யோசித்து வந்தார்கள். இந்த யோசனை தோன்ற மூல காரணமே ஆசியாக் கண்டத்தில் நாகரிகச் செருக்குடன், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரங்களாய் விளங்கிய இந்தியாவும் சீனாவும் தான்.

இந்த இரண்டு மண்ணையும் எப்படியாவது மிதித்தே விடுவது என கங்கணம் கட்டிக் கொண்ட ஐரோப்பிய வியாபாரிகள் ஏராளம். இந்த இரண்டு நாடுகளின் பெருமைகளும், காபூல் நகரத்து சந்தைகளில் மிகவும் பேசப்பட்டன. அதற்கு கட்டியம் கூறும் வண்ணம் அந்த சந்தைகளில் விற்கப்பட்ட இந்திய பட்டாடைகள், காஷ்மீர கம்பளங்கள், வாசனை திரவியங்கள், உணவில் சுவை சேர்க்க மணம் கமளும் மசாலா பொருள்கள், தந்தத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள், சீனத்து மூலிகைகள் என எல்லாக்கடைகளிலும் கோலோச்சும் இந்த நாட்டுப் பொருள்களின் ஆளுமை கண்டு ஐரோப்பியர்கள் மூக்கின் மீது விரலை வைக்க ஆரம்பித்து, கடைசியில் முழு கையையும் வைக்க வேண்டியதாகி விட்டது.

ஆனால் இந்த பொருள்களோடு வந்த கதைகள் அவர்களை திகைக்க வைத்தது. இந்திய மண்ணில் காலடி வைக்க தரை மார்க்கமாக கடக்க வேண்டிய தூரம் அவர்களை மலைக்க வைத்தது. தரை வழிப் பயணத்திற்கே உரிய சிரமங்கள் அந்த நாட்களில் மிகவும் கொடியதாய் இருந்தது. ஏதோ ஒரு ரயிலையோ அல்லது பேருந்தையோ பிடித்து அதற்கு பயணச் சீட்டுத் தொகை கட்டி, பண்பலை வானொலியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே பயணதூரத்தை கடப்பது போன்ற சிரமமில்லாத சமாச்சாரம் அல்ல என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

வழிப்பயணத்திற்கு தனக்கு மாத்திரம் உணவல்ல, தனது வாகனமான கால்நடைகளுக்கும் உணவு எடுத்துச் செல்லவேண்டும். வழியில் வரவேற்றுக் காத்திருக்கும் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க குறைந்த பட்ச தற்காப்பு ஆயுதங்களாவது தேவை. கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்டு மன்னனுக்கும் அடிபணிந்து கப்பம் கட்டவேண்டும்.

சுமந்து செல்ல முடிந்த அளவுக்கே சரக்கு எடுத்துச் செல்லமுடியும். இதற்கும் மேல் இயற்கையின் சீற்றங்கள், மலைவழிப் பாதைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சரி, போதும். அவர்களோடு பயணித்தது போதும். இந்த சிரமங்களை தவிர்க்கத்தான் மனிதன் நீர்வழிப் பாதையில் கவனம் செலுத்தினான். எகிப்திய அரச பரம்பரையில் 12வது பரம்பரை வரும் வரை யாரும் இப்படிப்பட்ட நீர்வழித்தடங்களை பற்றி சிந்திக்கக் கூட இல்லை.

வந்த அரசர்கள் எல்லாரும் ஆட்சி செய்தார்களோ இல்லையோ, சிலை வடிப்பதிலும், சிற்பங்கள் செய்வதிலும், வயிற்றைக் குலுக்கி நடனமாடும் அந்தப்புர அரை குறை ஆடை அழகிகளை ரசிப்பதிலும் தான் அதிக நேரம் செலவு செய்தார்களே தவிர, நாட்டின் வளம் பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. 12வது அரச பரம்பரையில் வந்த பார்வோனாகிய மூன்றாவது ஸெனுஸ்ரேத் என்ற மன்னனுக்குத்தான் ஒரு கால்வாய் வெட்டினால் என்ன என்ற யோசனை ஒரு சுபயோக சுபதினத்தில் உதித்தது. அதுவும் இப்போது நாம் பார்க்கும் சூயஸ் கால்வாய் அல்ல.

அவர் வெட்டியது என்னவோ செங்கடலையும் நைல் நதியையும் இணைக்கும் ஒரு சிறிய கோடு தான். இவர் போட்ட இந்த சிறிய கோடு எகிப்து நாட்டின் வணிகத்தை சிறிதே பெருக்கினாலும், மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் ஓரளவுக்கு இணைக்கத்தான் செய்தது. இவரது ஆட்சிக்காலம் கி.மு.1878 லிருந்து 1839 வரைதான். அதற்குப்பிறகு வந்த அரசர்கள் எல்லாம் இந்த கால்வாயை பற்றி சிந்தித்தர்களோ இல்லையோ தெரியவில்லை.

ஆனால் இந்த நீர்வழித்தடம் கிறிஸ்துவுக்கு முந்தைய 13 ம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது. அதாவது எகிப்தின் பிரசித்த பெற்ற மன்னரான இரண்டாம் ராமஸேஸ் வரையிலும் இந்த கால்வாய் இருந்திருக்கிறது. அதற்குப்பின் பலமுறை மூடப்பட்டும், பின் தூர்வாரப்பட்டும், பிறகு மூடப்பட்டுமென ஒரு கண்ணாமூச்சி விளையாட்டைத்தான் அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் எல்லாம் ஆடி இருக்கிறார்கள்.

ஹெரொதோடஸ் என்கிற கிரேக்க வரலாற்று எழுத்தாளர் எழுதுகையில் கி.மு.600 ல் எகிப்தை ஆண்ட இரண்டாம் நேகோ மன்னன், இந்தக் கால்வாயை நிர்மாணித்துவிட்டுத்தான் ம்றுவேலை என்று கிளம்பியவன், ஒரு இலட்சத்து இருபதாயிரம் வேலையாட்களை கொன்றது தான் மிச்சம், கால்வாய் நிர்மாணப்பணி அப்படியே இருந்தது என்று கூறுகிறார். கடைசியாக இந்த கால்வாய் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து மங்களம் பாடியவர் பெர்ஸியாவின் முதலாம் தரியஸ் மன்னன் தான்.

இவர் இதை முடித்துவிட்டு இந்த கால்வாயின் அழகை, இதன் நீள அகலத்தை அணு அணுவாக ரசித்திருக்க வேண்டும். இதன் மூலம் பெருகும் வருவாய் மற்றும் வாணிப நலன்களை பற்றி ஒரு கனவுக்கோட்டையே கட்டியிருக்க வேண்டும். சும்மா சொல்லக்கூடாது, இவர் ஒரு "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்" ரகம் போலும். பெர்சியாவிலிருந்து எகிப்துக்கு வந்து அதை போரிட்டுப்பிடித்து, தன் வசப்படுத்தி, அதில் உள்ள செழிப்புகளை கண்டு, கால்வாயை வெட்டி, இப்படி இப்படி எழுதிக்கொண்டே போய் முற்றுப்புள்ளி வைப் பதற்குள் மூச்சு முட்டுகிறது.

இவருக்கு கல்வெட்டுகளில் அதிக விருப்பம் போலும். தான் நிர்மாணித்த கால்வாய் கரையோரமும், மற்றும் நைல் நதிக்கரையோரமும் ஒரு கல்வெட்டை நாட்ட உத்தரவிட்டார். " நான் ஒரு பெர்சிய மன்னன், பெர்சியாவிலிருந்து புறப்பட்டு வந்து எகிப்தை வென்றேன். நைல் நதியிலிருந்து பெர்சியக் கடல் வரையிலான இந்தக் கால்வாயை நிர்மாணிக்க நான் ஆணையிட்டேன். கால்வாய் நிர்மாணிக்கப்பட்டதும் , நான் நினைத்தபடியே எகிப்திலிருந்து பெர்சியாவுக்கு கப்பல்கள் சென்றன" என்று எழுதி வைத்தார்.

இவர் காலத்துக்குப்பிறகு இந்தக் கால்வாயை பலர் மூடினார்கள், பின்பு திறந்தார்கள், பிறகு தூர் வாரினார்கள் என எழுதிக்கொண்டு போகலாமே தவிர அங்கு என்ன நடந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால் இதற்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்திய பெருமை திருவாளர் அப்பாஸித் காலிஃப் அல் - மன்சூருக்குத்தான் சேரும். பாக்தாத்தை தலைநகராகக் கொண்டு ஒரு பெரிய அரேபிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து ஆண்டு கொண்டிருந்த இவர் இந்தக் கால்வாயை எதற்காக மூடினார் என தெரியவில்லை.

ஒரு வேளை அங்கும் இங்குமாகத் தெரிந்த கல்வெட்டுகள் அவரை வெறுப்பேற்றியதோ என்னவோ தெரியவில்லை, இந்த கால்வாய் இருந்த சுவடு கூட தெரியாமல் மூடிவிட்டார். இப்படியாய் எகிப்தில் இருந்த முதல் நீர்வழிப் பாதை மூடப்பட்டு எந்த வம்பு தும்புகள் இல்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுதும் நன்றாக ஞாபகம் வைதுக்கொள்ளுங்கள், இன்னும் நாம் சூயஸ் கால்வாய் பக்கமே போகவில்லை.

ஆனால் நாம் போவதற்கு முன்னால் அங்கு வந்து சேர்ந்து விட்டார் நமது நெப்போலியன் அண்ணாச்சி. எங்கு கால் பதிக்கலாம், எப்படி கால் பதிக்கலாம் என மோப்பம் பிடித்து அலைந்தவருக்கு திடீரென்று மத்திய தரைக் கடலும், செங்கடலும் ஒரு சேரக் கண்ணில் பட்டு தொலைத்தது.

அவ்வளவுதான், தனது அனைத்து துர, ரத, கஜ, பதாதிகளுக்கும் ஆணையிட்டுவிட்டார். "வெட்டுங்கள் இங்கு கால்வாயை, மத்திய தரை கடலும் செங்கடலும் இணைய வேண்டும். அதில் நான் பயணித்து கிழக்கு நாடுகளுக்கு செல்லவேண்டும், அந்த நாடுகளின் செல்வங்கள் எனக்கு வேண்டும்" என்று மனிதன் கர்ஜிக்காத குறையாய் ஆணையிட்டார். அரசனின் ஆணைக்கு மறுப்பேது, உடனே கிளம்பினார்கள் வல்லுநர்கள் கால்வாய்க்கு வரைபடம் உருவாக்க. கி.பி.18 ம் நூற்றாண்டில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக ஆராய்ச்சி செய்தவர்கள் ஒரு தவறான அறிக்கையை நெப்போலியனுக்கு கொடுத்தார்கள். அதாவது, செங்கடலானது மத்திய தரைக் கடலை விட 10 மீட்டர் உயரம் அதிகம் உள்ளது, இதில் கால்வாய் வெட்டினால் செங்கடலின் நீரானது வேகமாய் மத்திய தரைக்கடலை நோக்கி வரும். அதில் பயணித்து நாம் செங்கடலுக்கு போக வாழ்நாள் முழுக்க எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும் என ஏகத்துக்கும் பயமுறுத்தி, இங்கு கால்வாயே வேண்டாம் மன்னா என்று சொன்னார்கள்.

வல்லுநர்களின் பேச்சை மீற நெப்போலியன் என்ன ஒரு 23 - ம் புலிகேசியா? உடனே எல்லா கடல்களையும் பார்த்துவிட்டு, வல்லுநர்களைப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு அடுத்த போருக்கு போய் விட்டார். ஆனால் வல்லுநர்களின் ஆய்வு எப்படி தவறாகப் போனது என்பதற்கு நிறைய அனுமானங்கள் உண்டு.

கேட்டாலும் நெப்போலியனின் போர்த்தினவுதான் இதற்கு காரணம் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஆராய்ச்சியாளர் அளவு கோல் எடுத்து எதையாவது ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், போர் முனையில் வாள் பிடிக்க அல்லது துப்பாக்கி பிடிக்க ஒரு ஆள் குறைவுபட்டதென்றால் உடனே நெப்போலியன் ஆராய்ச்சியை அப்புறம் பார்க்கலாம், முதலில் போர் முனைக்கு வந்து சேரு என்று செய்தி அனுப்பிவிடுவார்.

உடனே அந்த ஆராய்ச்சியாளர் அளவு கோலை அங்கேயே வைத்து விட்டு வாள் பிடிக்க போய் விடுவார். சண்டை எல்லாம் முடிந்த பின், அவர் இன்னமும் உயிர் பிழைத்திருந்தால், திரும்பி வந்து ஆராய்ச்சியை தொடரலாம். இல்லையேல் ஒரு புதியவர் வந்து ஆராய்வார். அவர் பழைய புண்ணியவான் விட்ட இடத்திலிருந்து தொடங்க வெகுவாய் முட்டி மோதி ஒரு நூல் முனையை பிடித்து, அப்பாடா கிடைத்தது தொடக்கம் என்று சொல்லி ஆராய்ச்சியை தொடங்கப்போவதற்குள் மறுபடியும் போர் முரசை நெப்போலியன் கொட்டி விடுவார்.

இப்படி ஒரு தொடர்ச்சி இல்லாத ஆராய்ச்சிகளினாலும், அந்த ஆராய்ச்சி முடிவுகளை சரியாக தொகுத்து அதற்கு வடிவம் ஏதும் தரப்படாததினாலும், தவறான தகவல்களே நெப்போலியனுக்கு போய் சேர்ந்தது. நல்லவேளை, நெப்போலியன் இந்த கால்வாயை கட்டத்தொடங்கவில்லை. அவர் மட்டும் கட்டியிருந்தால், அவரது முதல் இலக்கு இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் விதி அதோடு விட்டதா, இல்லை, இல்லை.

1854 மற்றும் 1856 களில் பெர்டினான்ட் டி லெஸ்ஸப்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டு தூதுவர் இந்த கால்வாய் பணிகளை துவக்கினார். இவர் தான் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்க வேண்டுமென ஒரு அர்த்தமுள்ள திட்டத்தோடு முன் வந்தவர். 1854 ம் வருடம் அக்டோப்ர் 30 ம் தேதி எகிப்திய மன்னரான சையத் பாஷாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1859 - ம் வருடம் ஏப்ரல் மாதம் 25 ம் தேதி முதல் கட்டப் பணிகள் ஆரம்பித்து, பத்து வருடங்கள் தொடர்ந்து 1869 ம் வருடம் நவம்பர் மாதம் 27 ம் தேதி அன்றைய எகிப்திய பேரரசரான இஸ்மாயில் பாஷாவினால் கப்பல் போக்குவரத்துக்கென திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தக் கால்வாய் ஆப்பிரிக்க மக்களின் வாழ்விலும் சரி, கிழக்கு நாடுகளின் வளங்களோடும் சரி, விளையாடிய விளையாட்டு இருக்கிறதே அதை பிரிதொரு முறை சொல்கிறேன். இப்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வோம்.

தொடரும்.

கறுப்பு மண்ணில் கலந்த நிறங்கள் - 1

நீர் மூடா நிலப்பரப்பில் சொர்க்கபூமியாய் உருக்கொண்டிருந்தும் நேயமற்ற மனிதர்களால் கண்டமாக உருவெடுத்து, அதில் துண்டமாக வெட்டப்பட்ட அற்புத பூமிப்பகுதி தான் ஆப்பிரிக்கா கண்டம். அதன் தென்கோடி முனையில் இந்திய பெருங்கடலாலும், வடமேற்கில் நமீபியாவாலும், வடக்கில் போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வேவாலும், வடகிழக்கில் மொஸம்பிக் மற்றும் ஸ்வாஸிலேண்ட் என்னும் நாடுகளாலும் சூழப்பட்டு கிடக்கும் தரைபகுதிதான் தென் ஆப்பிரிக்கா எனும் ஒரு வளம் கொழிக்கும் நாடு.

தன் பெயரிலேயே தன் கண்டத்தின் பெயரையும் கொண்டிருப்பதாலோ என்னவோ இங்கு ஒரு கண்டத்தின் அனைத்து வித்தியாசங்களையும் காண முடிகிறது.எனக்குத் தெரிந்தவரை தன் பெயரிலேயே தனது கண்டத்தின் பெயரையும்கொண்டநாடுகள்மிகச்சிலவே.ஆஸ்திரேலியா,அமெரிக்கா,இந்தோனேஷியா,தென் ஆப்பிரிக்கா போன்றவற்றை உதாரணமாக கொள்ளலாம். (தன் பெயரில் ஒரு பெருங்கடலையே கொண்டிருக்கும் நாடு உலகிலேயே இந்தியா மட்டும்தான் என்பது வேறு விஷயம்)இந்த இயற்கை வளம் கொழிக்கும் தென் ஆப்பிரிக்க நாட்டில் தான் அடியேன் பணியின் நிமித்தமாய் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

தென் ஆப்பிரிகா - மாசற்ற மனிதர்கள் வாழ்ந்த நாடு, இதயம் நிறைய மனித நேயம் நிறைந்து, எப்பொழுதும் சந்தோஷமாய், வளங்கள் நிறைந்து, வனங்கள் நிறைந்து, இயற்கையின் மடியில் புதியபூவாய் என்றும் மலர்ந்து நிமிர்ந்து நின்ற ஒரு நாடு. மனிதர்கள் எப்பொழுது இந்த மண்ணில் காலடி வைத்தார்கள் என்பதை குறித்த அனுமானங்கள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் வலம் வருகிறதே தவிர அடித்துச் சொல்ல ஆதராம் எதுவும் இல்லை.

மனிதன் கடலின்மீது மிதவைக்கலனாம் கப்பலை கண்டுபிடிக்கும் வரை, காற்றின் திசையை அறிந்து அதன் ரிஷிமூலம் காண புறப்படும் வரை, இந்த மண்ணிலும் நிம்மதி என்பது எட்டும் கனியாகத்தான் இருந்திருக்கிறது. வனங்களில் வாழும் மிருகங்களோடு மனிதனும் ஒரு சந்தோஷ பிராணியாகத்தான் நாட்களை கடத்தியிருக்கிறான்.பசித்தால் உண்ண அமுதச் சுவையுடன் பழங்கள், தாகம் தணிக்க தேனாய் ஓடும் ஆறு, கண்டு மகிழ இயற்கையின் வண்ணம், அயர்ந்து உறங்க திறந்த வனவெளி, வானம் பொழிந்தால் குடை பிடிக்க குகைகள், சூரியன் சுட்டால் நிழலால் போர்த்த படர்ந்துவிரிந்த பச்சைமரங்கள், தோள் தினவெடுத்தால் வீரம் காட்டி வேட்டையாட சாதுவான மிருகங்கள், காது குளிர கேட்டு மகிழ பண்பலை வானொலியாய் பறவை கானம் என வாழ்க்கை நிம்மதியாகத்தான் கழிந்தது.

பெண்களுக்கு பிரத்யேக வேலை எதுவும் இருக்கவில்லை. குழந்தை பெறுவதும், வளர்ப்பதும் மட்டுமே பெண்ணின் தொழிலாய் இருந்தது. அந்த நாட்களில் பெண்ணினம் அடிமைப் படுத்தபடவில்லை. நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என மேடைதோறும் முழங்கிவிட எந்த பெண் இயக்கங்களும் இல்லை.சாதிகள் இல்லை, எனவே சண்டைகள் இல்லை. மதங்கள் இல்லை, எனவே மனிதனுக்கு மதம் பிடிக்கவில்லை. ஆடைகள் இல்லை, எனவே ஆபாசம் இல்லை. அம்மணம் மறைக்க மனிதன் முயன்ற நாளிலிருந்துதான் ஆபாசமே தோன்றியிருக்க வேண்டும்.

பூசை செய்ய கடவுளர் இல்லை, எனவே பூசல் கொண்ட சடங்குகள் இல்லை. அண்டை வீட்டுக்காரன் இல்லை, எனவே அச்சம் என்பது மனதில் இல்லை.இன்றும் கூட எந்த இயற்கையின் சீற்றமும் இந்த மண்ணை உலுக்கிப் போட்டதில்லை. கடலில் தோன்றிய புயல்கள் எல்லாம் இந்த மண்ணின் கம்பீர அழகு கண்டு கரையோடு கரைந்து விட்டது.கரையை கடந்தது தென்றல் மட்டுமே. இந்த மண்ணை இதுவரை புயல் என்பது தொட்டுக் கூட பார்க்கவில்லை.

உலுக்கி எடுக்க புறப்பட்ட பூமித்தாயும், இந்த அழகை புரட்டிப்போட மனமில்லாமல் புதைந்து போய் விட்டாள். இந்த நாட்டை பூகம்பங்கள் அசைத்திருக்கலாமே தவிர அழித்துப் போடவில்லை.எங்கும் வளமை, எதிலும் இனிமை, பிறகு அடேய் பொன்னையா, எதனால் வறுமை எங்கே கொடுமை என நீங்கள் கேட்கலாம். இந்த பகுதிக்கு போகுமுன்னே பூகோள உருண்டை உங்கள் முன்னே இருக்குமே, அதை ஒரு முறை உருட்டிவிட்டு ஆப்பிரிக்கா கண்டத்தை ஒரு முறை உற்றுப் பாருங்கள்.

வேலை பளுவுக்கு மத்தியில் தமிழில் அதிகம் எழுத முடியவில்லை.

அடுத்த வாரம் சந்திப்போம்

பாவம் செய்யாதவன் முதலில் கல் எறியட்டும்!!!!

மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் சங்கபரிவார இயக்கத்தை சேர்ந்த பெண் துறவிக்கு தொடர்பு உள்ளது. இந்த காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். - பத்திரிகை செய்தி.

மகாரஷ்டிர மாநிலத்தில் வெடி குண்டு தயார் செய்யும் பொழுது அது வெடித்து ஹிமான்ஷு பான்சே மற்றும் நரேஷ் ராஜ் ஆகிய இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். - பத்திரிகை செய்தி.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகரில் வெடி குண்டு தயார் செய்யும் பொழுது அது எதிர்பாராத விதமாக வெடித்ததால் ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபிந்தர் சிங் ஆகிய இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் உடல் சிதறி இறந்து போயினர். - பத்திரிகை செய்தி.


தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதன் பொருட்டு மூன்று முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் மதக்கலவரம் ஏற்பட்டு, பெரும்பாலும் முஸ்லிம்களின் கடைகள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தென்காசியின் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாக்குமூலத்தில் குமார் பாண்டியனின் கொலையில் எதிர்பார்த்த அளவுக்கு மதக்கலவரங்கள் நடக்க வில்லை. ஆகவே இன்னொரு பெரிய கலவரத்தை உண்டாக்கவே குண்டு வைத்தோம் என்று கூறினார்கள். - பத்திரிகை செய்தி

தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர். தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். - பத்திரிகை செய்தி.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டான். ஒரு முஸ்லிமாக தான் மாறியதற்கான அடையாளமாக அதை காண்பிக்க ஆசைப்பட்டான். முஸ்லிம்களை அவமானப்படுத்தி காந்தி கொலையை முஸ்லிம்கள் தான் செய்தனர் என்று காண்பிக்க, இது வேண்டுமென்றே இந்து இயக்கங்களால் நடத்தப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சகோதரர்களே, மேற்சொன்ன செய்திகளெல்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன?

தீவிரவாதம் எனும் நச்சு, நமது சமூகத்தை இன, மொழி, மத பாகுபாடின்றி எல்லோரையும் பாதித்திருக்கிறது.

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற இந்துக்களுக்கு தங்க இடம் மறுக்கப்பட்டு, காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியவுடன், ஊடகங்களில் ஒரு சாரார் அநியாயத்தைப் பாருங்கள், இந்திய நாட்டில் இந்துக்களுக்கே உரிமை மறுக்கப்படுகிறது, இதுதான் மதச் சார்பின்மையா? என குமுறித் தீர்த்தார்கள்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பிறகு, குஜராத்தில் நடந்தேறிய கலவரங்களைக் கண்டு இன்னொரு சாரார், சிறு பான்மையினர் நசுக்கப்படுகிறார்கள், அரசாங்கம் தன் அனைத்து இயந்திரங்களையும் பயன் படுத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என ஊடகங்களில் கூக்குரலிட்டார்கள்.

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டவுடனும், அந்த வன்முறைத் தீ நாட்டின் பல பாகங்களுக்கும் பரவி கிறிஸ்தவர்களின் வீடுகள், தேவாலயங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்ட பொழுதும் மதச் சார்பின்மைக்கு முழு விலாசம் சொல்லுவதாக பாசாங்கு செய்யும் ஒரு சாரார் அதை சர்வதேச ஊடகங்களின் கவனம் திரும்பும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கினார்கள்.

இந்த கூக்குரலும், குமுறலும், பஞ்சாயத்தும், பேச்சு வார்த்தையும் அந்த எரியும் தணல் புகையும் வரை மட்டுமே. புகை அடங்கியவுடன், ஊடகங்கள் வழக்கம் போல யாருக்கு சிண்டு முடிந்து விட்டு பரபரப்பை உண்டாக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் மூலம் தங்களது வர்த்தகத்தை எவ்வளவு பெருக்கலாம் என்ற கேவலமும் அருவருப்புமான கணக்குப் போடுவதிலேயே நேரம் செலவிடுகின்றனர்.

போலி மதச் சார்பின்மை வாதிகள் அடுத்த கலவரம் எப்பொழுது உண்டாகும், நாம் விவாதம் செய்து பேட்டி கொடுத்து, நாமும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பி, பிரச்சனையின் வீரியத்தை எவ்வளவு திசை திருப்ப முடியுமோ, அவ்வளவு திசை திருப்பலாம் என காத்து காத்து தவம் கிடக்கிறார்கள்.

மத வாதிகளோ, அடுத்து எங்கிருந்து தொடங்கலாம் என யோசிக்க ஆரம்பித்து, அடுத்த பிரச்சனைக்கான தொடக்கம் கிடைப்பதற்கு அரும்பாடு படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள், ஒரு கவர்ச்சி நடிகை நீதிமன்றத்துக்கு வரும் போது என்ன உடை அணியலாம் அல்லது அணியக் கூடாது என்பது கூட மதவாத கோட்பாடுகளால் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயமாகிறது என்றால், மதம் எனும் பித்து நம்மை எவ்வளவாக பீடித்து இருக்கிறது என்று பாருங்கள்.

ஆனால் இருவர் மட்டுமே தங்களது கொள்கையில் பிடிவாதமாக மற்றும் நிலையாக முன்னறிச் செல்கிறார்கள்.

ஒருவர் திருவாளர் தீவிரவாதி, மற்றொருவர் திருவாளர் பொது ஜனம்.

தீவிரவாதி அடுத்த தாக்குதலுக்கு ஏற்ற இடம் எது என முதலில் வெடித்த குண்டுச் சத்தம் அடங்குவதற்கு முன்பே யோசிக்க ஆரம்பித்து விடுகிறார். நமது இல்லத்தரசிகள் சொல்வார்களே " இந்த தீபாவளிக்கு லட்டு சுடும் பொழுது, பூந்தி இன்னும் கொஞ்சம் சின்னதா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமோ? எதுக்கும் அடுத்த தீபாவளிக்கு கொஞ்சம் சின்ன கண்ணு வெச்ச அரிகரண்டி வாங்கி பூந்தி செஞ்சு பாக்கணும்" என்பது போல, "அடுத்த முறை குண்டு வைக்கும் பொழுது கொஞ்சம் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமா பாத்து வைக்கணும், பய புள்ளைக ஒரு முன்னூறு பேராவது சாவாங்கன்னு பாத்தா, வெறும் நூறு பேருதான் செத்திருக்காங்க, அடுத்த தரம் நம்ம பசங்க கிட்டச் சொல்லி கொஞ்சம் பவர் கூடுதலான குண்டா செய்யச் சொல்லணும்" என்பது போன்ற எதிர்காலத்திட்டத்தில் மூழ்கிப் போகின்றனர்.

திருவாளர் பொதுஜனமோ, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எங்க வீட்ல அடுப்பு எரிஞ்சுதா, எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டு சரியா திரும்பி வந்தாங்களா, சின்னத்திரை சீரியல ஒரு நாள் கூட விடாம பார்த்தாச்சா, சரி நாள் முடிஞ்சது, படுத்து தூங்கு. நாளைய பாட்டை நாளைக்கு காலைல பார்த்துக்கலாம் என்ற கடமையற்ற சுய நலத்துடன் அவரும் முன்னேறிச் செல்கிறார்.

நேற்று வரை பூக்கள் பூத்த இந்த நந்த வனங்களில் முட்களை விதைத்தது யார்?

நேற்று வரை தென்றல் வீசிய எங்கள் தெருக்களில் இன்று சூறாவளிகள் ஏன்?

அணைக்க மட்டுமே விரிந்த கரங்கள் இன்று அரிவாள் தூக்க துடிப்பது ஏன்?

ஏனைனில் நேற்று வரை எங்கள் நந்த வனங்களில் முட்களைக் கண்டவுடன் அதை இருவராய் இணைந்து வேரறுத்தோம். ஆனால் இன்று, அந்த முட்கள் என் பாதத்தை பதம் பார்க்காதவரை அது பூவனால் என்ன, முள்ளானால் என்னவென்று சுயநல கூட்டிற்குள் சுருங்கி விட்டோம். சமூகத்தை பீடிக்கும் நச்சுக்கள் என் இல்லத்து கதவை தட்டாதவரை எனக்கு அதனால் ஒரு தொல்லையுமில்லை என்று சுயநலத்தோடு முடிவெடுத்து விட்டோம். ஆனால், அன்பரே, சமூகம் என்பதே நாம் தானே. நம் சமூகத்தை தன் கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் தீவிரவாதத்திற்கு குண்டு வெடித்து கொலை செய்யும் ஒருமுகம்தான் உள்ளது என பொய்யாய் கற்பனை செய்யாதீர்கள். அதன் முகத்திற்கு சினிமா, சின்னத்திரை, சுயநலம், அரசியல், பணம், லஞ்சம், போலியான ஆன்மீகம் என பல முகங்கள் உண்டு. இத்தனை முகங்களில் ஏதாவது ஒன்றினை முகமூடியாய் அணிந்து கொண்டுதான் நானும் நீங்களும் போலியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அடாடாடா, ஒரு இந்து பெண்துறவி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விட்டார் என்றவுடன், இணைய ஊடகத்திலும் சரி, தொலைக்காட்சி ஊடகத்திலும் சரி, பதிவர் வட்டத்திலும் சரி எத்தனை கொக்கரிப்புகள், ஆகா, இதற்காகத்தானே காத்திருந்தேன் , வாருங்கள் துரியோதனர்களே, துச்சாதனர்களே, இன்று இந்த திரௌபதி உங்களை துகிலுரிக்க தருணம் வாய்த்தது என எத்தனை ஏளனங்கள், எத்தனை தீர்க்கதரிசனங்கள், எனக்கு இது எல்லாமும் முன்னாலேயே தெரியும் என்றும், இந்துத்துவாவின் கோர முகத்தைப் பாரீர் என்றும், யார் தீவிர வாதிகள் என்ற விவாதங்களும் அப்பப்பா, வாசிக்க வாசிக்க மூச்சு முட்டுகிறது.

சகோதரர்களே! ஒருவருக்கு நேராய் ஒருவர் விரல் நீட்டிவிட்டு ஒதுங்கி விடுவதால் இந்த தீவிரவாதம் எனும் துர்குணம் நம்மை விட்டு நீங்கி விடுவதில்லை. நான் மாற்றி நீ, நீ மாற்றி நான் என்று போட்டி போட்டுக்கொண்டு குற்றம் சுமத்துவதால், இந்த தீவிரவாதம் எனும் பீடை நம் சமூகத்தை விட்டு விலகிப் போய் விடுவதில்லை. முதலில் இதற்கு மதச்சாயம் பூசுவதை நிறுத்துங்கள். தீவிர வாதத்தில் அது என்ன இந்து தீவிர வாதம், கிறிஸ்தவ தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதம்? எல்லா வாதங்களும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்பவையே. சுட்டிக்காட்ட நீட்டிய விரல்களை சுருக்கி மடக்குங்கள். எந்தக் கடலை கடைந்தெடுத்து இந்த விஷத்திற்கு மருந்திடுவோம் என சிந்திப்போம், அனுப்புங்கள் ஆயிரம் அனுமார்களை, இந்த வியாதிக்கான மூலிகை தளைப்பது ஆயிரம் மலைகளானாலும் அப்படியே பெயர்த்துவர ஆணையிடுங்கள்.

இந்த விஷத்தை நாமே தின்று தீர்ப்போம், நம் குழந்தைகளாவது வருங்காலத்தில் அமுதம் உண்ணட்டும். அவர்களுக்கு ஒரு மாதிரியை வைத்துப் போவோம்.


"பாவம் செய்யாதவன் முதலில் கல் எறியட்டும்"!!!!

உண்மையாலுமே உண்மை இதுதானா ?

அழகிய கிராமம், பச்சை மரங்கள், கோலம் போட்ட வாசல்கள், ஊரைத் தொட்டபடி ஓடும் ஆறு, அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில், சைக்கிளில் பால் கேன்கள் சுமக்கும் பால்காரன், தாவணி கட்டிய பெண்கள் (இந்த காலத்திலுமா!!!!!????), வயல் வெளிகள், திருவிழா கூட்டங்கள், மீசை வைத்த பெரிசுகள், அரச மரத்தடி பஞ்சாயத்துகள், கடுக்கன் தொங்கும் கிழவிகள், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னே நிற்கும் மீசை அரும்பா விடலைகள், கற்க கசடற என்று குறள் எழுதப்பட்ட பள்ளிக்கூட சுவர்கள், காவல் நிலையத்தின் முன் அவசரமாக சைக்கிளை நிறுத்திச் செல்லும் ஏட்டையா, இருக்கிற ஒரே வங்கிக் கிளைக்கு மடிப்புக் கலையாத சட்டையோடும் நெற்றியில் பூசிய திருநீருமாய் வந்து கம்பீரமாய் அமர்ந்து நோட்டெண்ணும் கேஷியர், கால் நடை மருத்துவமனைக்கு போகும் வழியில் ம்மாஆஆ என்று கத்திக்கொண்டு போகும் மாடுகள், மளிகைக்கடை வைத்திருக்கும் செட்டியார், டீக்கடையில் அமர்ந்து தினத்தந்தி படித்து நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் நியாய மூர்த்திகள், உழவு உழுக கலப்பை செய்த காலம் போய், டிராக்டர் ரிப்பேர் செய்யும் மெக்கானிக் உழவர்கள், தலைவர் நடித்த படங்களுக்கு கொடிகள் ஒட்டும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பரட்டைத்தலையும், வாயில் புகையும் சிகரெட்டும், தூக்கிக் கட்டிய லுங்கியுமாய் ஊருக்குள் ரகளை செய்யவே காத்திருக்கும் சண்டியர்கள் இப்படி ஒரு கிராமத்திற்கான அத்தனை முகவரிகளையும் காமிராவிற்குள் பிடித்தாகி விட்டது. இனி கதையை தேடுவோம் வாருங்கள்.

ஒரு சண்டியராகத் திரியும் இளைஞன், இவனுக்கு கண்டிப்பாக பரட்டை முடியும், சிகரெட் புகையும் வாயும், சாராய பாட்டிலின் மூடியை வாயால் கடித்துத் திறந்து அனாயசயமாக அதை துப்பி விட்டு அதை அப்படியே முழுதும் குடித்து முடிக்கும் குணமும் அவசியம் இருந்தாக வேண்டும். ரெட்டை சடை போட்ட தாவணி கட்டிய பள்ளி மாணவி, கண்டிப்பாக டவுன் பஸ்ஸிலோ அல்லது சைக்கிளிலோ பள்ளிக்கு செல்பவளாகத்தான் இருக்கவேண்டும். இவள் பள்ளிக்குப் போகும் வழியில் தான் அந்த தறுதலை கதாநாயகன் சிகரெட் குடித்துக்கொண்டோ அல்லது சாராயம் குடித்துக்கொண்டோ இருக்க வேண்டும். இவள் தினமும் பள்ளிக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் இந்த பரட்டைத்தலை சண்டியரைப் பார்த்து கோபம் கொண்ட அல்லது மோகம் கொண்ட ஒரு பார்வையை வீசிய படி செல்லவேண்டும். நியதிப் படி கண்டிப்பாக இந்த பள்ளி மாணவி ஊர் பெரிய கவுண்டரின் மகளாகவோ அல்லது பணக்கார வீட்டுப் பெண்ணாகவோ இருக்கவேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் அவள் வாத்தியார் மகளாகவோ அல்லது ஏட்டையா மகளாகவோ அல்லது ஒரு வங்கிக் கேஷியர் மகளாகவோ இருந்தால் கூட போதும். ஆனால் அரசியல் வாதி மகளாக இருந்து விட்டால் சாலப் பொருத்தம்.

என்ன!!!! வாசித்துக்கொண்டே போகிறீர்களே, இன்னும் புரியவில்லையா, கிராமிய மணம் கமழும் ஒரு எதார்த்தமான படம் எடுக்கப் போகிறேன். ஊர்த்திருவிழாவில் பெரிய கவுண்டரிடம் சண்டியர் குடி போதையில் டாவடிக்க, வெட்டுக்குத்து வரை போய் நிற்கும் இந்தத்திருவிழா ரகளையில் சண்டியர் கைதாக (முன்னே பார்த்தோமே, சைக்கிளை நிறுத்திவிட்டு போனாரே அதே ஏட்டையா தான் விலங்கு மாட்டுவது), பெரிய கவுண்டரின் ரத்த சொந்தமான ஒருத்தர், (தம்பியாக இருக்கலாம், அல்லது பங்காளியாய் இருக்கலாம்) பெரிய கவுண்டருடனான முன்விரோதத்தின் காரணமாக சண்டியரை ஜாமீனில் வெளியிலெடுத்து கவுண்டருக்கு எதிராக கொம்பு சீவி விட்டு, கவுண்டர் சின்னவீட்டோடு குலாவிக்கொண்டிருக்கும் பொழுது அவரை தீர்த்துக் கட்டிவிட ஐடியா கொடுக்க வேண்டும். அவரைக் கொல்லும் பொழுது ஒரே அடியில் கொல்லுவதோ அல்லது வெடிகுண்டு வைத்து கொல்லுவதோ கூடாது குறைந்தது இருபது முறையாவது அவரை வெட்ட வேண்டும், ஒவ்வொரு முறை வெட்டும் போதும் கவுண்டரின் உடம்பிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து சண்டியரின் பரட்டை முடி, முகம், கை, கால், அழுக்கு லுங்கி என ஒவ்வொரு இடத்திலும் தவணை முறையில் படவேண்டும். இந்தக்கொலையை ஒரு கால் நடக்கமுடியாமல் முடமான ஒரு சின்னப் பையன் பார்த்து விட்டு அதைப் போய் தாவணி அணிந்து கனவில் சண்டியருடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியிடம் சொல்ல, கதாநாயகி வந்து நாயகனுக்கு தன் சித்தப்பாவின் சூழ்ச்சியை அழுதுகொண்டே விளக்குவார். குறைந்தது ஒரு பதினைந்து நிமிடமாவது இந்தக்காட்சியில் கதாநாயகி அழுது கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். இந்த நேரத்தில் சண்டியருக்கு கை நரம்புகள் புடைக்கலாம், நெற்றியில் ஒரு சுருக்கம் வந்து போகலாம், குடித்துக் கொண்டிருந்த பீடியையோ அல்லது சிகரெட்டையோ தரையில் போட்டு காலால் மிதிக்கலாம், அல்லது சாராயம் குடித்துக் கொண்டிருப்பாரெனில் மிகவும் வசதியாய் போயிற்று, அந்த பாட்டிலை அப்படியே பாறை மீது வீசி எறிந்து உடைக்கலாம்.இதற்குப்பின் அவர் எப்படி பழிக்குப்பழி வாங்குகிறாரென்றும் எப்படி தாவணியை கை பிடிக்கிறாரென்றும் திரையில் பாருங்கள்.

இப்படித்தான் இன்றைய கிராமிய மணம் கமழும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆச்சர்யம் என்னவென்றால் அவை வெகு ஜன வரவேற்பைப் பெற்று வெற்றிப்படங்களென ஊடகங்களாலும் வர்ணிக்கப்படுகின்றன. இந்தப் படங்கள் நம் முன்னே கிராமங்களைப்பற்றி வைக்கும் பிம்பங்கள் என்ன?

கிராமங்கள் என்றாலே, அங்கு அழுக்கும் நாற்றமும், கோவணம் கட்டிய மனிதர்களும், மூக்கில் சளி ஒழுக நிற்கும் குழந்தைகளும், குடிகார கணவர்களும், வைப்பாட்டி வைத்திருக்கும் பண்ணையார்களும், சுரண்டிப் பிழைக்கும் கந்து வட்டிக்காரர்களும், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளும், மாணவிகளை கற்பழிக்கும் வாத்தியார்களும் என ஒரு எதிர்மறை எண்ணங்கள் மாத்திரமல்ல, மிகையாகத் திரிக்கப்பட்ட வக்கிரமான பொய் பிம்பங்களைத்தான் திரைப்படங்கள் முன் வைக்கின்றன

இப்படி ஒரு பொய்யை கதையாக வாசிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறதென்றால் அதற்கு திரை வடிவம் கொடுத்து தைரியமாக மக்கள் முன்னே படைக்கிறார்கள் என்றால், எவ்வளவு வக்கிரம் நிறைந்த ஒரு சிலரின் கைகளில் திரையுலகம் என்னும் ஒரு மாபெரும் மக்கள் தொடர்பு ஊடகம் சிக்கித் தவிக்கிறதென்று நினைத்துப் பார்க்கவே பயமாய் உள்ளது.

இந்தக் கதாசிரியர்களுக்கும், இயக்குனர்களுக்கும், ஊடக வர்ணிப்பாளர்களுக்கும் ஒரு சில கேள்விகள்:

1. கிராமங்களைப்பற்றிய உங்களது படத்திற்கான மூலக்கருத்து எங்கிருந்து கிடைத்தது? நான் தான் படைத்தேன், உருவாக்கினேன் என்றல்லாம் பினாத்தாதீர்கள். பிரபஞ்சத்தில் ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு ஒரு பொருளையோ அல்லது கருத்தையோ மாற்றும் வித்தைதான் மனிதனிடத்தில் உள்ளதே தவிர, உருவாக்கும் திறமை யாரிடத்திலும் இல்லை.

2. நீங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கெல்லாம் ஒரு மேற்கோள் காட்டுகிறீர்களே "தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் வெல்லும்" என்று, இந்த தர்மம் எப்படி வெல்கிறது என்று நீங்கள் முன்வைக்கும் மாதிரிகளில் எவ்வளவு வன்ம மற்றும் வக்கிர உணர்வுகளை பொய்யாய் புனைகிறீர்கள் என எப்பொழுதாவது யோசித்ததுண்டா? பருத்தி வீரனாகட்டும், சுப்பிரமணியபுர வாசிகளாகட்டும், அரிவாள் இல்லாமல் வசனமே பேச மாட்டார்களா?

3. கதாநாயகர்களாக சித்தரிக்கப்படும் இவர்களிடம் சாராயம் குடிப்பது, சண்டை போடுவது, பெண்ணின் பின்னால் சுற்றுவது, அரிவாள் எடுத்து அடுத்தவனை ரத்தம் பீய்ச்ச வெட்டுவது அல்லது வெட்டுப்படுவது போன்ற குணங்களைத்தவிர வேறு குணங்களையே உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லையா?

4. கிராமத்து இளைய சமுதாயத்திடம் எழுந்து நிற்கும் அறிவுக் கூர்மையும் மதி நுட்பமும், இன்றைய நகர்ப் புற சமுதாயத்திற்கு சற்றும் சளைத்ததல்ல என்ற உண்மை உங்களுக்கு புலப்படாமல் போனது ஏன்? இன்று மென்பொருள் துறையிலாகட்டும், கட்டுமானத்துறையிலாகட்டும், இன்னும் எந்தத் துறையை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அந்தத் துறையிலும் கோலோச்சி நிற்கும் பெரும்பான்மை கிராம இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் எல்லாம் உங்கள் கண்களில் படுவதேயில்லையா?

5. சிறுதொழில் செய்து முன்னேறுபவர்கள், சாதிக்கொடுமையை எதிர்த்துப் போராடுபவர்கள், படிப்பில் முதன்மை வகிப்பவர்கள், சேவை மனப்பான்மையோடு பணிபுரியும் ஆசிரியர்கள், மாலை வேளையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அதற்கென காத்திருந்து, மாணவர்களுக்கு கால்பந்து கற்றுத்தந்து, அவர்களோடு கால்பந்து விளையாடும் காவல்துறையினர், மாணவிகளுக்கு தையல் கற்றுத்தந்து ஊக்குவிக்கும் ஆசிரியைகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என வகை வகையாக அடுக்கிக் கொண்டே போகலாமே, இவர்கள் யாருமே உங்கள் கண்களில் தெரிவதில்லையா? அல்லது உங்கள் கற்பனை உலகத்தின் எல்லைக்கு அப்பால் இருக்கிறார்களா?

6. இன்னும் இந்திய கிராமங்களை ஒரு சாபத்தின் குறியீடாகவே ஏன் பார்க்கிறீர்கள்? அல்லது ஒரு அருவருப்புகளின் நிகழ்விடங்களாகவே ஏன் சித்தரிக்கிரீர்கள்?

7. கிராமத்து திருவிழாக்களில் கூட உங்களுக்கு இன்னும் ஆடப்படும் காவடி ஆட்டத்தின் நளினமோ, ஒயிலாட்டம், மயிலாட்டத்தின் அசைவுகளோ தெரிவதில்லை. தப்பட்டை அடித்து ஒரு கருத்தினை மையமாக வைத்து மணிக்கணக்காக சுருதி மாறாமல் அடித்து ஆடி, இது வரை கண்டிராத மற்றும் கேட்டிராத சேதி சொல்லும் அந்த நாட்டிய நாடகங்கள் உங்கள் கண்களில் படாமல் போனதேன்? மாறாக கரகாட்டக்காரிக்கும் குட்டைப் பாவடை அணிவித்து, அவளது ரவிக்கையின் அளவை சுருக்கி, மார்பின் பிளவுகள் மற்றும் அளவுகளை வெளிக்காட்டவும், இடுப்பு மடிப்புகளில் இருந்து, தொடையின் நிறம் தெரியும் வரை காமிரா கோணங்கள் அமைக்கவும் பெரும் பாடு பட்டு கலைச்சேவை செய்கிறீர்களே, இது வக்கிரத்தின் வெளிப்பாடில்லாமல் வேறென்ன?

8. கிராமத்தில் ஒழுக்கம் நிறைந்த பண்ணையார்களே இல்லையா? பண்ணையார் என்று இருந்தால் அவர் வைப்பாட்டி வைத்திருப்பவராகத்தான் இருக்க வேண்டுமா?

9. கிராமங்களில் நிகழும் அனுதின நிகழ்வுகளைத்தான் நாங்கள் படம் பிடித்துக் காட்டுகிறோம் என்றும், கிராமத்திற்கென்றே உரிய பிரச்ச்னைகளைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம் என்றும் தயவு செய்து பாசாங்கு பதில்களை சொல்லாதீர்கள். கிராமத்துப் பிரச்சனைகளின் மீது இவ்வளவு அக்கறை கொண்ட நீங்கள் எத்தனை முறை பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி பிரச்சனைகளை, அந்த பிரச்சனைகளுக்கே உள்ள வீரியத்தோடும், ஆழத்தோடும் பிரதிபலித்திருப்பீர்கள்? என் இனிய தமிழ் மக்களே என்று பாசம் பொழிபவர்கள் கூட சப்பாணியையும் பரட்டையையும் ஒரு பெண்ணின் பின்னே அலைபவர்களாகக் காட்டித்தான் கைதட்டல் வாங்குகிறார்கள். ஒரு பெண்ணுக்கான சண்டையையும், மண்ணுக்கான சண்டையையும், திமிர் பிடித்த பண்ணையாரை எதிர் கொள்ளும் கூலிக்கார கதாநாயகனையும் தவிர, உங்கள் கேமராக்கள் வேறு கோணங்களில் பயணிக்க மறுப்பதேன்?

10. கிராமத்து வாலிபப் பெண்களை நீங்கள் பார்க்கும் பார்வை என்றுதான் மாறுமோ தெரியவில்லை. ஊர்த்திருவிழாவில் மாமன் வாங்கித்தரும் சடைக் குஞ்சத்துக்கும், ரப்பர் வளையலுக்கும், கலர் ரிப்பனுக்கும் மயங்கி மாமனுக்கு முத்தம் கொடுத்து, எப்ப மூணு முடிச்சு போடுவே மாமா என ஏங்கிக் கிடந்த காலங்கள் மலையேறிப் போனது. இன்று விடுமுறை நாட்களில் காட்டில் களை எடுத்து விட்டு, மாலையில் கம்ப்யூட்டர் படிக்கப் போகிறார்கள் பெண்கள். அப்பனும் ஆத்தாளும் காட்டிய பையனுக்கு கழுத்தை நீட்டிய காலம் போய், வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுய அறிவுள்ளவர்களாக மாத்திரமல்ல, சுதந்திரம் உள்ளவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த தெளிவான சிந்தனைகள் எங்கள் கிராமத்து இளம் பெண்களிடம் வெகுவாக இருக்கிறது. வீட்டுக்காரர் ஆசையாய் வாங்கிக் கொடுத்த பச்சைக்கலர் பட்டுப்புடவை, அண்ணன் காட்டில் நெல் விளைந்து அமோக அறுவடை ஆனதும் தங்கச்சிமேல் பாசம் மாறாமல், குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்கப்போனபொழுது ஆசையாய் ஒரு பவுன் சங்கிலி குடுத்தானே அந்தச் சங்கிலி என்ற மனதை நெகிழ வைக்கிற பழைய கால சமாச்சாரங்கள் இன்னும் எங்கள் பெண்களிடையே உண்டு. ஆனால் அதே சமயத்தில் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் எத்தனை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தெளிவான சிந்தனையும் உண்டு. பெற்ற மக்களை எப்படி வளர்ப்பது, என்னவாய் உருவாக்குவது போன்ற எதிர்கால திட்டங்களில் எங்கள் கிராமத்துப் பெண்கள் வெகுவாக முன்னேறியிருக்கிறார்கள். பணத்தைக் கையாள்வதிலும், எதிர்காலத்திற்கான சேமிப்பிலும், குடும்ப நிர்வாகத்திலும், சமூக மேம்பாட்டிலும் என சொல்ல எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது, அத்தனை துறையிலும் எங்கள் கிராமத்துப் பெண்கள் முன்மாதிரியாய் நிற்கிறார்கள்.

ஏன் இந்த முன்னேற்றங்களோ, நல்ல விஷயங்களோ உங்கள் கண்களில் படுவதில்லை ????????


மாறாக நீங்கள் கிராமத்துப் பெண்களாகக் காட்டுபவர்களில் ஒருத்தி (பருத்தி வீரன் நாயகி) சொல்லுகிறாள் " என் உடம்பை அம்மணமா காட்டறதுண்ணா அது உனக்குத்தான்னு அந்த சாமிகிட்டயே சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேண்டா" " எனக்கு கல்யாணம் பண்ணிவெச்சா வேற எவங்கூடயாவது படுத்து புள்ளை பெத்துக்குவன்னு மாத்திரம் நினைக்காதீங்க", மற்றும் காதலுக்கு சோதனை வந்த நேரத்தில் " ஏண்டா, நீ பேசாம எங்கூட படுத்து எனக்கு ஒரு புள்ளைய குடுத்துரேண்டா"!!!!!!!!!!! கேட்பதற்கு காது கூசும், அல்லது ஒழுக்கம் கெட்டு, காசுக்கு உடலை விற்கும் ஒரு விலை மாது கூட பேச வெட்கப்படும் வார்த்தைகளை ஒரு கிராமத்துப் வாலிபப் பெண் சர்வ சாதரணமாய் பேசுவது போல யோசிக்க உங்களால் எப்படி ஐயா முடிகிறது?

எந்நேரமும் (சுப்பிரமணிய புரத்தில்) தன் வீட்டின் முன் அமர்ந்து சிகரட் குடித்துக் கொண்டும், அடுத்தவனை ஏமாற்றி சாராயம் குடித்துக் கொண்டும், வயதான விதவைத்தாயின் உழைப்பில் சோறு சாப்பிட்டு, ஊருக்குள் சண்டையிட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு இளைஞனை பார்த்து எந்தப்பெண்ணுக்காவது காதல் பொத்துக் கொண்டு வந்து, அந்த இளைஞனுக்காய் அந்தப் பெண் ஏங்கவும் அழுகவும் செய்கிறாள் என்றால் நிச்சயமாய் அந்தப் பெண்ணின் மன நிலையை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், இன்றைய இந்திய கிராமத்துப் பெண்கள், நான் முன்பே கூறியது போல வாழ்கைத்துணையை தேடுவதிலும், தெரிந்தெடுப்பதிலும் வெகு ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள்.

எத்தனை தொலைக்காட்சிகள் வந்தாலும், எத்தனை நவீனத்துவம் கிராமத்து வாழ்க்கையை ஆட்கொள்ள முயற்ச்சித்தாலும், எங்கள் இந்திய கிராமம் என்பது என்றுமே நீங்கள் வர்ணித்தது போல் பருத்தி வீரன்களாலும், சுப்பிரமணியபுர அரிவாள் மற்றும் அரசியல் கோஷ்டிகளாலும் சூழப்பட்டதில்லை. எங்கள் பெண்கள் தரக்குறைவான வார்த்தைகளை பேசி காதலர்களுடன் கொஞ்சி மகிழ்ந்ததில்லை. தத்ரூபம் என்ற பெயரில் அபத்தங்களையோ, வக்கிரங்களையோ, அப்பட்டமான பொய்களையோ சொல்லி, கிராமம் என்றால் இப்படித்தான் என்ற ஒரு பிழையான பிம்பத்தை நிகழ்கால சந்ததிக்கு தருவதோடு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததிக்கும் வைத்துப் போகாதீர்கள்.

நீங்கள் தத்ரூபம் என கற்பனை செய்து, உங்கள் வக்கிர எண்ணங்களுக்கெல்லாம் கிராமத்து எதார்த்தம் என்ற பொய்யான வண்ணம் பூச நினைப்பதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரே ஒரு கேள்வி தான் மனதில் எழுகிறது.

உண்மையாலுமே உண்மை இதுதானா ?